Friday, October 12, 2007
தினமணி - தமிழ்நாட்டுக்கும் இராமருக்கும் பூணூல் பாலம்..
பத்திரிகை உலகின் தன்னிகரற்ற மனிதராக விளங்கிய அய்யா திரு.இராம.திரு.சம்பந்தம் அவர்களுக்குப் பிறகு தினமணி தன் நடுநிலையை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருகிறது என்பது தினமணி வாசகர்களில் பெரும்பான்மையினர் கருத்தாக உள்ளது.
கிராமப்புறங்களில் "ரெக்கார்டு டான்ஸ்" என்கிற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெறுவதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதில் பாடல்கள் இசைக்கப்படும், மேடையின் மீது ஒன்று அல்லது இரண்டு பெண்கள் நடனமாடுவார்கள். இசையின் வேகத்திற்கு ஏற்ப தான் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி எரிவார்கள். ஒருகட்டத்தில் கழற்றி எரிய ஆடை இல்லாமல் அம்மணமாய் நிற்கும் போது. வேறு வழியின்றி விளக்குகள் அணைக்கப்படும். நிகழச்சி முடிவடையும். பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது சட்டென எனக்கு நினைவுக்கு வந்தது தினமணி நாளிதழ்தான்.
மொழியுணர்வுத் தீப்பந்தமாய் இருந்த நம் அய்யா சம்பந்தம் அவர்கள் தினமணிக்கு - ஆடைபூட்டி அழகு பார்த்தார். இப்போது கடைசியாய் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துபடங்கள் என எழுதி வேறு வழியின்றி விளக்குகளை அணைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டுக்குள் பத்திரிகை விற்று அந்த பணத்தில் வாழும் இவர்கள் தமிழ் நாட்டின் 100 ஆண்டுகால கனவுத் திட்டத்தை எதிர்க்க வடநாட்டு கும்பலோடு கைகோர்த்து, இராமர் பாலம் வழியாக ராமராஜ்ஜியம் அமைக்க புதியதாக கிளம்பி உள்ளார்கள்.
தினந்தோறும் பரப்பும் பொய்யுரைகளுக்கு பதிலளித்தால் நாம் வேறு வேலை பார்க்க முடியாது (அவர்களுக்கு இதுவே வேலை). நாம் பார்க்கும் வேலையின் நடுவே இளைப்பாறுதல் தான் இது போன்ற பதிவுகள். "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று கூறுவார்களே, அது தற்போது நடந்துள்ளது. தினமணியே உங்களின் நிலையைத் தெளிவாக அறிவித்தற்கு மிக்க நன்றி.
மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஏற்க செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி. தந்தை பெரியாரோ, பேரறிஞர் அண்ணாவோ, தமிழக முதல்வர் கலைஞரோ "கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி" என்று கூறுவது தன் வீட்டில் உள்ளவர்களை விலக்கி அல்ல, அவர்களையும் உள்டக்கித்தான். " வீட்டை திருத்தி விட்டு நாட்டுக்கு வா" என்கிறீர்கள். மகிழ்ச்சி, எங்கள் வீடும் நாட்டுக்குள் தான் இருக்கிறது. பிரச்சாரம், அறிவுரை எல்லாம் எங்கள் வீட்டில் உள்ளவர்க்கும் சேர்த்துதான்.
"இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகியவை சமுதாயத்தின் அருமை பெருமைக்கு ஆதாரமாக உள்ளது" தினமணியின் கண்டுபிடிப்பு. இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். சூத்திரன் சம்பூகன் தவம் செய்வதைக் கண்ட பார்ப்பனர்கள், மனுதர்மப்படி சூத்திரனுக்கு அந்த தகுதி கிடையாது என்று இராமனிடம் முறையிட இராமனோ சம்பூகன் தலையை கொய்து விடுகிறான். இது தான் இராமனின் பண்பாடு. சூத்திரன் படித்தால் நாக்கை அறு, படிப்பதை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று எனக்கூறுவது மனுதர்ம பண்பாடு. மனுமர்மத்தை உயர்த்தி பிடிக்கும் இராமனை, அத்வானியும் இல.கணேசனும் வைத்திய நாதன்களும், துக்ளக் சோ-க்களும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடலாம், அவர் வழி நடக்கலாம். சூத்திர கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் அவசியமில்லை.
இறை மறுப்பு இயக்கம் இந்தியாவிலும் மட்டுமல்லாது உலக நிலையிலும் தோல்வியைக் கண்டுள்ளது என்று " தினமணி" கூறுவது தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது. மனிதனின் பரணாம வளர்ச்சியை கூறும் டார்வின் தத்துவத்தை கத்தோலிக்க மதகுரு போப் ஜான்பால் (கடந்த முறை பதவி வகித்தவர்) கருத்தியல் ரீதியாக ஏற்றுக்கொன்டார் என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழகத்தில் பெரியாருக்கு பிறகு பக்தி அதிகமாகி விட்டதாக கூறுகின்றீர்கள், சரி ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். இராமரையும் அவரது பாலத்தையும் பாதுகாக்க, குரல் கொடுக்க, வடநாட்டு அத்வானியும், சோ, இல.கணேசன், இராமகோபாலன், வைத்தியநாத அய்யர்களை தவிர வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை. காரணம் பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம்.
இந்தியாவின் உயர்ந்த பீடமாக கருதப்பட்ட "லோக குரு" காஞ்சி - சங்கராச்சாரியாரை கைது செய்தபோது சங்கரமடத்தின் பக்கத்து தேநீர் கடை கூட மூடப்படவில்லை. இதுதான் உங்கள் நிலை தமிழகத்தில்.
எந்தவொரு பகுத்தறிவாளனும் கோயிலுக்குள் சென்று கொலை செய்தது கிடையாது. அடுத்த மதத்துக்காரனை உயிரோடு எரித்தது கிடையாது. அவனது வழிபாட்டுத்தளத்தை இடித்தது கிடையாது. "கடவுள் இல்லை" என்று கூறும் ஒருவரால், ஒரு கோயிலுக்கோ, ஒரு மசூதிக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டிடருக்கமா? அன்பை போதித்த 8000 சமணர்களை கழுவேற்றி கொன்ற பெருமையுடையதுதான் உங்கள் இறை நம்பிக்கை.
சேது சமுத்திர திட்டம் என்பது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் ஓர் அற்புதமான திட்டம். சுமார் பத்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு, வேலைவாய்ப்பை பெருக்கி தென்னகத்தை முன்னேற்றும் என்பது மறுக்க இயலா உண்மை.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றபட வேண்டுமா? அல்லது இந்துமத உணர்வுகளை தூண்டி விட்டு தமிழகத்தின் வளம் கொழிக்கும் திட்டத்தை கெடுக்க வேண்டுமா? என்பதை மக்கள் மன்றத்திடம் விடுவோம். அவர்கள் முடிவு செய்யட்டும். அதுவரை இராம பக்தர்கள் பஜனை செய்யுங்கள், இராமராவது தமிழ்நாட்டு மக்கள் மனதில் புகுந்து மாற்றம் செய்வாரா? பார்ப்போம். கடவுள் இருந்தால் தனது பாலத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் உங்களுக்கு ஏன் கவலை?
Saturday, October 6, 2007
சேது சமுத்திரத் திட்டம்... இராமரும்... அவரின் பாலமும்...
சரி வரலாற்றுக்கு ஆதாரமாய் (?) விளங்கும் கண்ணுக்குத் தெரியாத இராமன் பாலத்தை உடைப்பதை எதிர்க்கும் இவர்கள் நம் கண்முன் பாபர் மசூதியை உடைத்தவர்கள் தானே. இயற்கையாய் உருவான மணல் திட்டு, இராமன்பாலம் அது எங்கள் நம்பிக்கை, எனவே அதை உடைக்க கூடாது என்றால் மனிதர்களால் கட்டப்பட்ட பாபர் மசூதி கூடத்தான் இந்த நாட்டின் குடிமக்களில் பலரது நம்பிக்கை. ஏன் உடைத்தீர்கள்? என்று கேள்விகள் எழுப்புவோமானால் எங்கள் நம்பிக்கைக்கு எதிராய் எவர் வரினும் அவர் “காந்தியே, ஆனாலும் வாழவிட மாட்டோம்” என்று கொக்கரிகிறார்கள். இவர்களின் இராமனும், அவன் பாலமும் கற்பனையே என தொல்லியல் ஆய்வுத்துறை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூற கொதித்தெழுந்த கூட்டம், அதிகாரிகளைப் பணி நீக்கம் செய், பிரதமரும், சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறிகிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கை இந்த இந்து மதவெறி கூத்தில் மறைக்கப்படும் கொடுமையைக் கண்டு நெஞ்சம் கொதிக்குது. சரி இவர்கள் கூறும் இராமனையும், இராமன் பாலத்தையும் பற்றி உண்மையைப் பற்றி கொஞ்சம் பார்போம்.
இராமாயணம் நடந்த கதையல்ல!
இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் வரலாறு இல்லை; உள்ள கதை அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல்லோகம் என்றம் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரத்துக்கு வழியும் இல்லை.
இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள் பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?
இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்திரிப்பதே இராமாயணம்.
இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தாமனதோ, நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு பெரும்கற்பனைச் சித்திரமும் அல்ல.
(வால்மீகி இராமாயணம் - சி.ஆர்.சீனிவாசய்ங்கார் மொழிபெயர்ப்பு)
இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் இராமன் கேட்கும்பொழுது, “பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அயோதித்தி காண்டம் 100 ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)
இராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, “திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கம் பேதமில்லை” என்று சொன்னதாகக் குறிப்பிடபட்டுள்ளது.
(மேற்படி காண்டம் 106 ஆவது சர்ககம்; 412 ஆவது பக்கம்)
(சுந்தர காண்டம் 15 ஆவது சர்ககம் 69 ஆவது பக்கம்)
வாலியிடம் இராமன் கூறும்பொழுது “பூர்வத்தில் ஒரு பவுத்தசன்யாசி உன்னைப்போல் கொடிய பாவத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான்” என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.(கிஷ்கிந்தா காண்டம் 18 ஆவது சர்க்கம்; 69 பக்கம்)
இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது, “ வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள், புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின்மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்...முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும் கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் காட்டப்பட்டன” எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவ்வுலகத்தில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் (சுனாமி) காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெரு வெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூற்றாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும்; நான்காவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்தாவது வெள்ளம் ஒன்பதினாயிரத்து அய்நூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாமென்றும் அறியக் கிடக்கின்றன.
இவை எக்கேல், அக்கிசிலி, டோயினார்டு, பேர்கசன், சுவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக் கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப் பழைய காலத்தே நடந்ததாகத் தெரிய வருவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வடமேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும், வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் இராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.
சுமார் கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தமிழ் நாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.
காலஞ்சென்ற ஆசிரியர் கார்த்திகேய முதலியார், “குமரியாற்றுக்கும், பஃறுளியாற்றுக்கும் இடையிலுள்ள பெருவள நாடே பழந்தமிழ்நாடாகும். இது பெரியதொரு ஆற்றிடைக் குறையாதலின், இதற்கு அலங்கமென்றும் பெயராம், அலங்கம் லங்கையாயிற்று. அலங்கமெனினும் ஆற்றிடைக் குறையெனினும் ஒக்கும். இலத்தீன் மொழியில் இலங்கைக்கு டாப்ரோபேன் என்று பெயர். டாப்ரோபேன் என்பது தாமிரபரணி என்பதன் சிதைவு. கடல் கோளுக்குட்படாமுன் இலங்கைக்கு இப்பொழுது தென்பாண்டி நாட்டில் ஓடும் தாமிரபரணியின் பாய்ச்சலிருந்தமையால் அப்பெயர் வந்தது.” என்று அவர் இயற்றிய அரியமொழி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டவருக்கும் பெருமையைக் கொடுப்பதொன்றாகும். காட்எலியட் என்பவர் கூறிய அய்ந்தாவது கடல் வெள்ளம் ஏறக்குறைய 9,500 ஆண்டுகளுக்கு முன்னேயே நிகழந்ததாகும். அங்ஙனமாயின் யாவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட முச்சங்கங்ளின் முதற்சங்கம் இக்கடல் வெள்ளத்துக்குமுன் குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த நாட்டில் நிறுவப்பட்டதாகும். இச் சங்கத்தை நிறுவிய மன்னர் காய்ச்சினவழுதி முதல் கடுங்கோன் மன்னர் வரை எண்பத்தொன்பது மன்னர் ஆவர்.
ஆராய்ச்சி உண்மை இவ்வாறு இருக்கையில், 21 லட்சம் (21,00,000) ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தீவும், அயோத்தி நாடும் இருந்ததாகக் கூறும் இராமாயணக் கதை எவ்வளவு பெரிய பொய்க் கதையாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.தொடரும்...
Friday, October 5, 2007
இராமனின் சின்னப் புத்தி - கிஷ்கிந்தா காண்டம் சர்ககம்-1
“என்னைப் பார்த்தால் உண்டாகும் ஆனந்தத்தால் மலர்ந்த கண்களுடன் சீதையும் இப்படியே என்னைச் சேர்ந்து சுகத்தைக் கொடுப்பாள் அல்லவா?” (பக்கம் 7)
“அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன. இந்த பம்பை நதியில் அடிக்கும் சகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்கமாட்டேன்.”
இராமன் ஒரு இடத்தில் “நான் அயோத்தியில் இருக்கும் போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே” என்ற கருத்தில் துக்கப்படுகிறான்.
ஆகவே, இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கி சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது. பாலம் அமைத்து மீட்டிருக்க மாட்டான் என்பதும் தெரியவருகிறது. மேலும் இராமன் காட்டுக்கு வந்தது; சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வந்திருப்பான் என்றும் தெரிகிறது.
இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்தரித்து எழுதுவதால், கடவுளுக்கும், கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள்.
ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள் எப்படியெனில்:
அவர்கள் குறிப்பிடும் காலக் கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம். லட்சம் சதுர்யுகம், கேரி சதுர்யுகம் என்றுதான் குறிப்பிடுவார்கள்.
அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.
தாசிகள்கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.
ஆண்களைப் பலாத்காரம் செய்த விபசாரிகளையும் பதிவிரதை லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்கள்.
மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.
10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறுகோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.
இப்படியாக, இவை போன்ற ஏராளமான பொய்கள், புனைச் சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.
(மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்த்த வால்மீகி இராமாயணத்தில் உள்ளது)
தொடரும்...
Saturday, September 29, 2007
இந்துமத வெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து சவப்பாடை ஊர்வலம்
ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டனர். ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
Thursday, September 13, 2007
புதுச்சேரி, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் தந்தை பெரியார் 129-ஆவது பிறந்த நாள் விழா
தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்த நாள் வரும் 17-09-2007 திங்கள் அன்று தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக பெரியார் தி.க. கோட்டைமேடு கிளை சார்பாக, தந்தை பெரியார் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் வரும் 17-09-2007 திங்கள் மாலை 6-00 மணிக்கு, அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டத்திற்கு கோட்டைமேடு பெரியார் தி.க. பொறுப்பாளர் இரா.பெருமாள் அவர்கள் தலைமையேற்கிறார். ந.இரவி, சி.சிவமுருகன், ச.தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில இளைஞர் அணிச் செயலாளர் செ.சுரேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றுகின்றார்.
திரைப்பட நடிகர், கலைமாமணி திரு.குமரிமுத்து (தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க.) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுகின்றார்.
பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
மேலும் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி துணைத் தலைவர் இரா.வீராசாமி, பொருளாளர் வீரமோகன், செயலாளர் சு.விசயசங்கர், அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ, இளைஞரணித் தலைவர் சா.சார்லசு, துணைச் செயலாளர் கோ.இராசேந்திரன், துணைச் செயலாளர் சிவராந்தகம் மு.சிவபெருமாள், மற்றும் பெரியார் தி.க.வின் பல்வேறு பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். நிகழச்சியின் இறுதியில் நன்றியுரை இரா.இராசசேகர் அவர்கள் கூற விழா நிறைவடைகிறது.
Tuesday, September 11, 2007
சேலம் ரயில்வே கோட்டம்...மீண்டும் அரங்கேற பார்க்கும் துரோகம்...



தமிழ்நாட்டு உரிமைக்காக தன் உயிரைத் துறக்கத் துணியும்
சட்டக் கல்லூரி மாணவர் - பெரியார் தி.க. செயல்வீரர் பன்னீர்செல்வம்.
இந்திய அரசு தமிழர்களின் தயவில் இருப்பதால் பல நன்மைகள் கிடைத்து வருகின்றது. அவைகளில் ஒன்று தான் சேலம் கோட்டம் அமைத்தது. நீண்ட நெடிய போராட்டத்திற்குபின் அதுவும் குறிப்பாக பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மக்களை அரசியல் இயக்கங்களை, திரட்டும் பணியில் ஈடுபட்டு அதில் இன்று முழு வெற்றியும் கண்டுள்ளார். சேலம் கோட்டம் அமைவதை எதிர்த்த மலையாளிகள் அதிலும் குறிப்பாக கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுôனந்தன், கேரளாவிற்கு எதிராக தமிழகம் கிளர்ந்தெழவதைக் கண்டு, புத்திசாலித்தனமாக, "சேலம் கோட்டத்தை எதிர்க்கவில்லை, அமைத்துக்கொள்ளுங்கள், கோவை திருப்பூரை பாலக்காடு கோட்டத்தில் இருக்க வேண்டும்" என ரொம்ப பெருந்தன்மையோடு கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கேரளாவில் உள்ள சின்ன சின்ன ரயில்வே நிலையங்கள் கூட அனைத்து வசதிகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களான கோவை-திருப்பூரில் கூட அத்தகைய வசதி கிடையாது. தற்போதுள்ள நிலைகூட குறிப்பாக 96-க்குப் பிறகு தான் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசில் நமது தமிழககட்சிகள் பங்கு பெற்ற பிறகு தான் இத்தகைய மாற்றங்கள் உருவானது என்பது மறுக்க இயலா உண்மை.
சேலம் ரயில்வே கோட்ட விவகாரத்தில் மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரும். சேலம் ரயில்வேகோட்ட பாதுகாப்பு குழு என்ற பெயரில் ஒருங்கிணைந்து கேரளாவிற்கு எதிராக "சேலம் கோட்டத்தை தடுக்கும் கேரளாவிற்கு செல்லும் ரயில்களை தடுப்போம், சேலம் கோட்டத்தை வர விடாமல் செய்யும் மலையாளிகளுக்கு செல்லும் பொருட்களை தடுப்போம்" என போராடிவரும் வேளையில் கேரளாவிற்கு ஆதராவாகவும் தமிழ்நாட்டிற்குள் சில குரல்கள். "இப்படி செய்தால் ஒருமைப்பாடு கெட்டுப் போகாதா? இரு மாநிலங்களுக்கிடையே பகைமை வளராதா? நாமெல்லாம் இந்தியர்களில்லையா? உழைக்கும் மக்களில்லையா" என குறுக்கு சால் ஓட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தை தந்திரமாக ஏமாற்றி வருகிறார்கள். சேலம் கோட்டப் பாதுகாப்புத் தலைவர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு...
இந்தியாவை, அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 1 2 3 இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை தெளிவாக எதிர்ககும் மார்க்சிஸ்டுகள்,
கோவை-திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டு தொழில்நகரங்களை
கேரளாவிற்கு அடிமையாக்கும் நிலையை ஆதரிப்பது ஏன்?
இந்தியாவிற்கு ஒரு அஜென்டா..
கேரளாவிற்கு அஜென்டா..
இதைத்தான் பெரியார் சொல்வார்
"தலைக்கொரு சீயக்காய் தாடிக்கொரு சீயக்காய்"
Thursday, September 6, 2007
கோவில் நுழைவுப் போராட்டம் ; வரலாற்று உண்மைகள்
தந்தை பெரியார் தனது ஆரம்ப காலம் தொடங்கி மறையும்வரை சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வை ஒழிக்கின்ற வகையில் பாடுபட்டு வந்தார் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக, கோவிலில் நிலவி வந்த சாதியத் தீண்டாமை ஏற்றத் தாழ்வை ஒழிக்கும் பொருட்டு தந்தை பெரியாரும் அவர்தம் சுயமரியாதை இயக்கமும் நடத்திய போராட்டங்களை யாரும் எளிதில் மறுத்துவிடவோ, மறைத்திடவோ முடியாது.
தினமணி ஸ்தாணுநாதன் எழுதிய வரலாறு படைத்த நிகழ்ச்சி என்ற கட்டுரையில் மதுரை வைத்தியநாத அய்யர் நடத்திய கோவில் நுழைவுக் கிளர்ச்சிபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் அருணன், “கடம்பவனம்” என்னும் நாவலை மார்ச் 2001-ல் வெளியிட்டு இருந்தார். அந்த நாவலில் “கதையின் கதை” என்ற தலைப்பில் முன்னுரை எழுதிய அருணன், “மீனாட்சி கோவில் ஆலயப் பிரவேசம் முதலில் மிகச் சாதாரண நிகழ்வாகப்பட்டது. சிந்திக்க சிந்திக்க மிகஅபூர்வமான விஷயமாக எழுந்தது” என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவுக் கிளர்ச்சியை அறிமுகம் செய்கிறார்.
தன்னுடைய போக்கிலேயே கதை சொல்லி வந்த அருணன், கோவில் நுழைவுக் காட்சியைப் பற்றி விவரிக்கும்போது, “வெளியே திரண்டிருந்த மக்களிடம் மீனாட்சி கோவிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்து விட்டதாக அய்யர் அறிவித்தார். கூட்டம் பிரமாதமா கைதட்டி வரவேற்றது” என்றும், “அது நடந்தது என்றால் வரலாற்றிலேயே அப்போதுதான் நடந்தது. தமிழகத்தில் வேறெங்கும் இன்னும் நடக்காதது கடம்பவனத்தில் (மதுரையில்) நடந்தது.” (பக்:33) என்றும் எழுதுகிறார். தமிழகத்தில் முதன் முதலில் கோவில் நுழைவுப் போராட்டம் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்தியதுதான் என்று தினமணியும் திட்டமிட்டு பரப்பி வந்த புரட்டை, பொய்யான வரலாற்றை தோழர் அருணன் அவர்களும் வழி மொழிந்துள்ளார். மேலும், தீண்டாமையை ஒழித்து, எல்லோருக்கும் சம உரிமை கிடைக்கச் செய்திடவே மதுரை வைத்தியநாத அய்யர் உண்மையோடு, உணர்வோடு அந்தப் போரட்டத்தை நடத்தினார் என்ற வகையில் அருணன் கடம்பவனம் நவாலில் பல செய்திளை எழுதியுள்ளார்.
ஆனால், எஸ்.வி.இராசதுரை, பேராசிரியர் தொ.பரமசிவன். முனைவர் கோ.கேசவன் ஆகிய ஆய்வாளர்கள் மதுரை கோவில் நுழைவுக் கிளர்ச்சி பற்றிய தங்களது ஆய்வுகளை வெளியிட்டு உள்ளனர். அவர்களுடைய ஆய்வின்படி “காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் காங்கிரசில் இராஜாஜியா? சத்தியமூர்த்தியா? (காமராஜர்) என எழுந்த கோஷ்டி மோதலில் இராஜாஜியின் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ளவும், நெருங்கி வந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசின் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும், தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் ஆகியோரின் உற்ற துணைவன் காங்கிரஸ்தான் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் செய்கையாகவே மதுரை வைத்தியநாத அய்யரின் கோவில் நுழைவுக் கிளர்ச்சி நடந்தது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது”
இப்படி வரலாற்றுத் திரித்து எழுதும் திரிபுவதிகளின் முகமூடியைக் கிழிக்கவும், கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி பெரியாரும் அவரின் சுயமரியாதை இயக்கமும் அதன் தோழர்களுமே என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துவோம். கோவில்கள் என்பது மனிதனை இழிவுபடுத்தும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற சாதி வித்தியாசத்தை நிலைநிறுத்தும் இடமாகவும், பார்ப்பனார்கள் மட்டும் பாடுபடாமல் சோம்பேறித்தனமாக வயிறு வளர்க்க, பார்ப்பனர்கள் அல்லாதாரின் பொருளைக் கொள்ளை அடிக்க ஏற்ற இடமாகவும் இருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் சாதி வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ள இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவமான வர்ணாசிரம தர்மத்தை சத்தமின்றிப் பரப்பக்கூடிய பிரச்சார நிறுவனமாகவும் கோவில் விளங்கி வருகிறது.
கோவில் கருவறைவரை ஒரு சாதியும், உட்பிரகாரம் வரை ஒரு சாதியும், கொடிமரம் வரை ஒரு சாதியும், சுற்றுச்சுவருக்கு வெளியே ஒரு சாதியும் இருந்து வழிபாடு செய்யக்கூடிய நிலைதான் அன்று இருந்து வந்தது. இந்து மத வர்ணாசிரம தர்மத்தின்படி, பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரகர்கள், ஆகியோர் மேற்கண்டபடி கோவிலின் குறிப்பிட்ட எல்லைக்குள்தான் வழிபாடு நடத்த உரிமையிருந்தது. ஆனால், சூத்திரரில் சில பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் தீண்டப்படாதோர் கோவிலில் நுழைந்து வழிபாடு நடத்த உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. கோவிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டு கோவிலுக்கு வெளியே இருந்து கோபுரத்தை மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்த கூட்டம், இன்றைக்கு கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை பெற்றது எப்போது? யாரால்? பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சார்தாலும், போராட்டத்தாலும்தான் தாழ்த்தப்பட்ட, தீண்டப்படாத மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு கோவில் நுழைவுக்கான உரிமைப்போர் முன்னெடுக்கப்பட்டது.
பார்ப்பன இந்து மதத்தால் தாழ்த்தப்பட்டோர், தீண்ட்ப்படாதோர், என ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குச் சமூக விடுதலைப் பெற்றுத் தருவதே பெரியாரின் லட்சியமாக இருந்தது. அன்று காங்கிரசில் இருந்த பெரியார் இந்த இழிவினை போக்க 1922-ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் கோவில் நுழைவுப் பொது உரிமைகள் வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் பார்ப்பனர்களால் புறக்கணிக்கப்பட்டது.. அப்போதே கோவில் நுழைவு உரிமைக்கானப் போராட்டத்தை பெரியார் தொடங்கிவிட்டார்.
கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள பாதையில் தாழ்த்தப்பட்டோரும், தீண்டப்படாதவர்களும் நடப்தைக் தடுத்த கொடுமை 1924-ல் நடந்தது. பொது இடமான கோயிலுக்கு அருகில் உள்ள சாலைகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்பதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன.
ஒரு கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. போராடிய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியாரை போராட்டக் குழுவினர் அழைத்தனர்.
போராட்டத்திற்குத் தலைமையேற்ற தந்தை பெரியார் வைக்கத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டார். அதனாலேயே தந்தை பெரியார், வைக்கம் வீரர் எனப் புகழப்பட்டார்.
வைக்கம் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியின்றி பேச்சு வார்த்தைக்கு வந்தார் திருவிதாங்கூர் ராணியார். ராணியார் பெரியாரிடம் நேரடியாகப் பேசினால் பெரியாரின் புகழ் உயர்ந்து விடும் என்று பொறாமை கொண்ட ராஜாஜி, பேச்சு வார்த்தைக்கு காந்தியை அழைத்து வந்தார். ஆக 1924-ஆம் ஆண்டில் வைக்கத்தில் மீண்டும் கோவில் நுழைவு உரிமைகக்ககான முழக்கத்தைத் தந்தை பெரியார் முன் வைத்தார்.
“பொது இடங்களான கிணறு, சாலை, கோவில் போன்ற இடங்களில் பொது உரிமை இருக்க வேண்டும். தனித் தனியான உரிமைகள் கூடாது. இந்த உரிமைகள் மறுக்கின்ற இடங்களில் உரிமைகளைப் பெற வேண்டி போராட வேண்டி இருக்கும்” என்பதை தந்தை பெரியார் தனது அறிக்கைகளிலும் உரைகளிலும் பிரகடனப்படுத்தினார். வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சுசீந்தரத்தில் தீண்டப்படாதார் கோவில் நுழைவுக் களர்ச்சி 1925-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது.
“நமது நாட்டிலே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப்பட்டவர்கள், கண்ணில் தென்படக்கூடாதவர்கள், தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள், தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதவர்கள் என எத்தனையோ இலட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும், பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக் கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந்நிலையில் நமக்கு சுயராஜ்யமும் விடுதலையும் அத்தியாவசியாமா? என்பதைப் பொது மக்களே சிந்தக்க வேண்டும்.
சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சம்துவத்தை நிலை நாட்டுவதற்கேயாகம். தமிழ்நாட்டினர், வைக்கம் சத்தியாகக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும் ஒத்தாசை செய்தார்களோ, அவ்வாறே சுசீந்திரம் சத்தியாகிரகத்திற்கும் தாங்கள் நன்கொடையளித்தும், ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்” என மேற்கண்டவாறு சுசீந்திரம் கோவில் நுழைவு கிளர்ச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்து அறிக்கை ஒன்றை தந்தை பெரியார் தனது குடி அரசு (31-01-1926) மூலம் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்டினார்.
1927-ஆம் ஆண்டில் ஜே.என்.இராமநாதன் தலைமையில் பல தாழ்த்தப்பட்ட தோழர்கள் திருச்சி தாயுமானவர் கோவிலில் நுழைந்தனர். அவர்கள் மலைக்குப் படியேறிச் சென்றபொழுது பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த ரவுடிகளால் அடித்துத் தள்ளப்பட்டு, பாறைகளில் உருட்டி விடப்பட்டனர். ஜே.என்.கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலை கோவிலில் நுழைந்தவர்களை கோவிலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டனர். அவர்கள் மீது வழக்கும் போடப்பட்டது.
1927-ஆம் ஆண்டு மே மாதத்தில் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட அனைத்துச் சாதியினரும் மயிலாதுறை மயூரநாதர் கோவிலில் நுழையச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட கோவில் நிர்வாகிகள் கோவில் நுழைவாயிலையும் கருவறையையும் பூட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருப்பினும் பக்கவாட்டுக் கதவுகள் மூலமாக தோழர்கள் கோவிலினுள் நுழைந்தனர்.
அடுத்த ஆண்டு 1928-ல் திருச்சி மலைக் கோட்டையிலும் (25-06-1928) திருவானைக்காவிலும் (12-08-1928) கோவில் நுழைவுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்போரட்டங்களில் பங்கு பெற்ற தோழர்கள் குண்டர்களால் பலமாகத் தாக்கப்பட்டனர்.
1929-ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடத் தோழர்களையும் அனுமதிக்கக வேண்டும்” என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தந்தை பெரியார் முன்னிறுள்ளார். அதற்கு அடுத்த நாளே பெரியார் கோவை சென்றுள்ளார்.
பெரியார் கோவை சென்றதும், பெரியார் துணைவியார் நாகம்மையார் துணையுடன் குத்தூசி குருசாமி அவர்கள் கமிட்டியின் தீர்மானத்தை நடைமுறைபடுத்த துணிந்தார். குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் உள்ளிட்ட ஈரோடு கச்சேரி வீதி, ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து, முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துச் சென்று தேங்காய், பழம், பூ, ஆகியவை அடங்கிய தட்டுடன் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தார். குத்தூசி குருசாமி தனது தோழர்களுடன் கோவிலுக்குள் நுழைந்ததைக் கண்ட பார்ப்பனர்கள் அந்தச் செய்தியை ஊரெங்கும் பரப்பிவிட்டனர்.
பொது மக்களின் துணையோடு குத்தூசி குருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்பொழுதே வெளிக்கதவை இழுத்து மூடி பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் கோவிலின் பூட்டிய கதவைத் திறக்க மறுத்துவிட்டனர். அந்த இரண்டு நாட்களிலும் குத்தூசி குருசாமியும் மற்ற தோழர்களும் கோவிலுக்குள்ளேயே இருந்துள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பின் தந்தை பெரியார் கோவையில் இருந்து வந்தார். அதற்குப் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமியும் மற்ற தோழர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இது பற்றிக் கூறும் போது, அந்த இரண்டு நாட்களும் நாங்கள் அன்னை நாகம்மையார் அளித்த உணவு உண்டு பசியாறினோம். ஆனால் கடவுளான ஈஸ்வரன் தான் பட்டினிகிடக்க நேரிட்டதுஎன்று குத்தூசி குருசாமி வேடிக்கைகயாககக் குறிப்பிட்டுள்ளர்.
குத்தூசிகுருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைக் கண்டித்து தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பொறுப்பிலிருந்து தந்தை பெரியார் விலகினார்.
நாடார்கள் மற்றும் தாழ்த்ப்பட்டோருக்கு கோவில் நுழையும் உரிமை அளிக்க வேண்டும் என்றும் அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும் ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும்என்று தந்தை பெரியாரால் 1922-ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த தீர்மானத்தை ஆட்சேபித்து சத்தியமூர்த்தி அய்யர், மதுரை வைத்திய நாத அய்யர். கும்பகோணம்பந்தலு அய்யர், ஆகியோர் கூச்சல் போட்டுகுழப்பம் விளைவித்து, பெரும் கலகத்தையே உருவாக்கி அத்தீர்மானத்தை ஓட்டுக்கு விடாமல் அத்தீர்மானத்தின் சாரமான கோவில் நுழைவு உரிமையின் உயர்நாடியை அழித்து விட்டனர்.
1922-ஆம்ஆண்டு கோவில் நுழைவு உரிமைக்கு எதிராக கூப்பாடு போட்ட மதுரை வைத்தியநாத அய்யர் தான் கோவில் நுழைவுப் போராட்டத்தின் முன்னோடி என்று தேசியத்திலகங்கள் எல்லாம் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
வைத்தியநாத அய்யரின் வருணாசிரம வெறியை வரலாறு பறைசாட்டுவதை மறைத்து விட்டு மனுதர்மவாதிகள் அவரை "அரிஜனத் தந்தை" என்ற அடைமொழியோடு பொய் வரலாற்றைப் புனைந்து எழுதுகிறார்கள்.
1922-ஆம் ஆண்டு கோவில் நுழைவு உரிமைக்கு எதிராக இருந்த மதுரை வைத்தியநாத அய்யர் 1939-ஆம் ஆண்டு மதுரை கோவிலில் நுழையும் போராட்டத்தை நடத்தக் காரணம் என்ன? அன்று இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? அவரைஅந்தப் போராட்டம் நடத்தக் தூண்டிய காரணி எது?
17-ஆண்டுகளில் வைத்தியநாத அய்யரின் மனநிலை மாற்றம் அடைந்து தீண்டாமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்து புரட்சி செய்து விட்டாரா? அதன் பின்னர் தீண்டாமைக் கொடுமையை அழிப்பதை தன் வாழ்நாளின் முக்கிய பணியாகச் செய்தாரா? இல்லை. இல்லவே இல்லை.
ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் "பெரியார் மரபும் திரிபும்" என்ற நூலில் üசுயமரியாதை இயக்கத்தின் கோயில் நுழைவுகருவறை நுழைவுப் போராட்டங்கள் என்ற தலைப்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த போராட்டம் பற்றி கூறியிருப்பதைப் பார்ப்போம்.
üüஅப்போது நடக்கவிருந்த மதுரை ராமநாதபுரம் ஜில்லாபோர்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதைக் கருத்தில் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேர கடைசி பூசைக்குப் பிறகு சில தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைந்து, தேசிய பத்திரிகைகளின் பெரும் ஆரவாரமிக்க அங்கீகாரம், ராஜாஜியிலிருந்து காந்திவரையிலான தேசியத் தலைவர்களின் புகழ்ச்சி ஆககியவற்றைப் பெற்றுக் கொண்டார். பெரியாரால் "குள்ளநரி" என்று அழைக்கப்பட்ட மதுரை ஏ.வைத்தியநாதய்யர் தாழ்த்தப்பட்டோருக்கு கோவில் நுழைவு உரிமை என்பதை 1922-ல் கடுமையாக எதிர்த்தவர் இதே நபர்தான் என்பதை üüதிரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்துýý தெரிந்து கொள்ளலாம்.
"இனாம் குடிகளின் உரிமையையும் இனாம்தாரி, ஜமீன்தாரி,ஒழிப்பையும்" எதிர்த்தவரும் இவர்தான் மேற்சொன்ன மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாதய்யர் நடத்தி வைத்த üநுழைவுý கூட அப்போது அக்கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ்.நாயுடு என்ற நீதிக்கட்சிக்காரரின் அனுமதியாலும்இசைவின் பேரிலுமே சாத்தியமாற்று. தாழ்த்தப்பட்டவர்களை அனுமதித்ததின் காரணமாக, கருவறையைப் பூட்டிவிட்டு மறுநாள் கோவிலுக்கு வராமலிருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவர் ஆர்.எஸ்.நாயுடுதான், (குடிஅரசு 16-07-1939) (நகரதூதன் 16-07-1939)
குறுகிய அரசியல் இலாபத்திற்காக, தாழ்த்தப்பட்டோரின் உயிரான உரிமைப் பிரச்சனையை பகடைக் காயாக பயன்படுத்தி விளையாடிய, மதுரை வைத்தியநாத அய்யர் கோவில் நுழைவுப்போராட்டத்தின் முன்னோடி என்று கூறுவது அயோக்கியத்தனமானது என்பதை வரலாற்று ஆய்வுகள் நிரூப்பிக்கின்றது.ஆனால், குத்தூசி குருசாமி நடத்தியகோவில் நுழைவுப் போராட்டம் என்பது, ஏற்றுக் கொண்ட கொள்கை வழிப்பட்ட போராட்டம்.
ஏற்றத்தாழ்வை ஒழித்து சம உரிமைபெற வேண்டி நடந்த சமதர்மப் போராட்டம். உண்மையான உணர்வோடு, உறுதியான உந்துதலோடு ஒடுக்கப்பட்டோரின் உரிமை பெற நடந்த போராட்டம்.
தன் வாழ்நாள் முழுவதும் அந்த உரிமைப் போருக்குத் தன்னையே ஒப்படைத்த சுயமரியாதைப் போராளியின் எழுச்சிப் போராட்டம்.எந்த இலாபத்தையும் எதிர்பாராமலும், உள்நோக்கம் இல்லாமல், தாழ்த்தப்பட்ட, தீண்டபடாத மக்களின் சுயமரியாதையை வென்றெடுக்க நடந்த போராட்டம்.
சாதி,மத,கடவுள் பெயரால் கடைபிடிக்கக்பட்ட தீண்டாமைக் கொடுமையைஅடித்து நொறுக்கிய ஆதிக்க ஒழிப்புப் போராட்டம்